பெரும்பான்மையான தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணித்துள்ளது. விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
லட்சக்கணக்கான விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழலில் உள்ளனர். இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க இன்று போராட்டம் நடந்து வருகிறது. கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு ஆட்சியர் அலுவலகம் நோக்கி 1000க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை மக்கள் பேரணியாக சென்றார்கள். சிபிஎம் சிபிஐ, திமுக உள்ளிட்ட பல கட்யினரும் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தற்போது அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் மாணவர்கள் தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.